எந்தக் கட்டடங்களுக்கு களப்பணி தேவையில்லை?: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் விளக்கம்
எந்தக் கட்டடங்களுக்கு களப்பணி தேவையில்லை என்பது குறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.
எந்தக் கட்டடங்களுக்கு களப்பணி தேவையில்லை என்பது குறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சார் -பதிவாளர்களுக்கு வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
கிரையம் உள்ளிட்ட உரிமை மாற்று ஆவணங்களில் மனையுடன் கட்டடமும் சேர்த்து உரிமை மாற்றம் செய்யப்படும்போது கட்டடத்தின் மதிப்பைக் கணக்கிட களப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
சாதாரண கட்டடங்களைப் பொருத்து பதிவு அலுவலர்களால் பதிவின்போது தயாரிக்கப்படும் படிவத்தில் குறிக்கப்படும் கட்டட மதிப்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், உதவி செயற்பொறியாளரால் மதிப்பிடப்படுகிறது. ரூ.25 லட்சத்துக்குக் குறைவான கட்டட மதிப்பு கொண்டவை சார்பதிவாளரால் மதிப்பிடப்படுகிறது.
நகர ஊரமைப்பு இயக்ககம், உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகாரம் பெறப்பட்ட கட்டடங்களின் வரைபடம் ஆவணப்பதிவின்போது தாக்கல் செய்யப்பட்டிருந்தால், களப்பணி செய்யப்பட வேண்டிய தேவையில்லை.
இந்த வகை கட்டடங்களைப் பொருத்து, அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளின் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே கட்டட மதிப்பீட்டு அறிக்கை படிவம் தயாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட படிவத்தின்படி மதிப்பு குறைவாக இருப்பது தெரிய வந்தால், அந்தக் குறைவு மதிப்புக்கு தேவையான முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் ஆகியவற்றை ஆவணதாரர் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை வசூலித்து ஆவணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.