எட்டு மாத கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எய்ட்ஸ் பாதித்த ரத்தம்: சாத்தூரில் நிகழ்ந்த கொடூரம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எட்டு மாத கர்ப்பிணிக்கு கவனக்குறைவின் காரணமாக எய்ட்ஸ் பாதிப்புக்குளான ரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எட்டு மாத கர்ப்பிணிக்கு கவனக்குறைவின் காரணமாக எய்ட்ஸ் பாதிப்புக்குளான ரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் மருத்துவ சோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.அங்கு சோதனையில் அவருக்கு இரத்த சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே அவருக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் பொருட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு கடந்த 3-ஆம் தேதி அவருக்கு செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் சிவகாசியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு ஹெச்,ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.உடனடியாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சமீபத்தில் வேறு யாருக்காவது ரத்த தானம் செய்துள்ளாரா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது.
அந்நிலையில்தான் அவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருப்பதும், அந்த ரத்தம்தான் சாத்தூர் மருத்துவனையில் எட்டுமாத கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பின்னர் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது
இதைத் தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் விசாரிக்கப்பட்டு, பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் வளர்மதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடரும் விசாரணையில் மேலும் சில மருத்துவனை ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஏழை எளிய மக்களின் கடைசிப் புகலிடமாக அரசு மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் இத்தகைய அலட்சியமான செயல்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக அமைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.