நாங்களும் மக்களைச் சந்திப்போம்: தமிழிசை சௌந்தரராஜன்
திமுகவைப் போன்று நாங்களும் மக்களைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து விவரிப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார்.
திமுகவைப் போன்று நாங்களும் மக்களைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து விவரிப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி தற்காலிமானதுதான். எங்களுக்கு ஏற்பட்ட சிறிய சறுக்கல் அது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பிரதமர் வேட்பாளருக்கு ராகுல் காந்தியை முன்மொழிந்தார். ஆனால், அதற்கு யார் ஆதரவுத் தரப் போகிறார்கள். இப்போது, பல்வேறு மாநிலங்களில் பிரிந்திருக்கும் கட்சிகளை நம்பியே ராகுலை பிரதமராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
நாங்கள் வளர் தாமரை: தமிழகத்தில் தாமரை மலரும். படர் தாமரையாக இருப்பவர்கள்தான் அதைப் பற்றி சந்தேகிப்பார்கள். நாங்கள் வளர் தாமரை. யார் என்ன விமர்சனம் செய்தாலும் கண்டுகொள்ளப் போவதில்லை. கரிசல் மண், காவி மண்ணை மூடி இருக்கிறது. எங்களைப் பற்றி ஆராய்ச்சியிலேயே அனைவரும் உள்ளனர். அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி.
தாமரை மலருமா என்பது பற்றி மட்டுமே அவர்களது ஆராய்ச்சி உள்ளது. செல்வோம், சொல்வோம், வெல்வோம் என திமுக கூறியுள்ளது. நாங்களும் மக்களிடம் செல்வோம். ஜனவரி 5-ஆம் தேதியில் எங்களது பிரசாரத்தைத் தொடங்குகிறோம். அப்போது மக்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைச் சொல்வோம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டதற்கு ஒரு நன்றி கூட எதிர்க்கட்சியினர் சொல்லவில்லை. அவர்கள் பிரதமர் மோடியின் எதிர்ப்பாளர்கள் என்பது மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைக்காதவர்கள் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.