முகப்பு
தமிழ்நாடு

பள்ளி கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறைகளை மாணவர்களை பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்

Updated On : 26 டிசம்பர் 2018, 2:21 am IST
பகிர்:


காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறைகளை மாணவர்களை பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கல்வி அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.தியாகராஜன் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் அரசு உதவிபெறும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் சுழற்சி முறையில் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்களை கழிப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய ஒரு குழுவை தனியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.
பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments