தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு சிறுவாணி வாசகர் மையம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் ஆற்றி வருகிறது.
கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் சார்பில் ஆண்டுதோறும் நாஞ்சில் நாடன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பரிசுத் தொகை ரூ.50 ஆயிரம், கேடயம், சான்றிதழ் ஆகியவை அடங்கியதாகும். கடந்த ஆண்டு (2018) ஓவியர் ஜீவாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளரும், உவேசா படைப்புகள், பல நூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப.சரவணனுக்கு கோயம்புத்தூர் அண்ணாசிலை அருகில் உள்ள ஆர்த்ராஅரங்கில் ஜன.20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் தி.சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ், ஆலோசகர்கள் சொல்வனம் வ.சீனிவாசன், ஆர்.ரவீந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.