கடந்த தேர்தலைவிட 5,604 வாக்குகள் குறைவாக பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் 5 ஆயிரத்து 604 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் 5 ஆயிரத்து 604 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்ற போதிலும் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்தியஇணை அமைச்சரானார். இதனால், தேசிய அளவில் இத்தொகுதி தனி இடம்பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தனித்து போட்டியிட்டன. கன்னியாகுமரி தொகுதியில் 9.91 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 67.50 சதவீதமாகும்.
இதில், பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 239 வாக்குகளும், திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 933 வாக்குகளும்பெற்றனர். 2019 மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார்.
Advertisement
Advertisement
அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் மீண்டும் களம் இறங்கினார். இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டதால் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் என சுமார் 4.50 லட்சம் வாக்குகள் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் 5,604 வாக்குகள் குறைவாக அதாவது 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.