கண்டதேவி ஊருணியில் அம்மன் சிலை கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் ஊருணியை தூர்வாரியபோது, இரண்டரை அடி உயரமுள்ள சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் ஊருணியை தூர்வாரியபோது, இரண்டரை அடி உயரமுள்ள சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஊருணி உள்ளது. புராண காலத்து ஊருணியான இதை, ஜடாயுத புனித தீர்த்த ஊருணி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊருணி தண்ணீரை கோயில் பயன்பாட்டுக்கும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த ஊருணியில் தண்ணீர் வற்றி, கோரை, பாசி, தாமரை இலைகள் மண்டி, கழிவுகள் நிரம்பி மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதையறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த பருவதமலை மகான் மெளனயோகி அருட்பேரவை என்ற தனியார் அமைப்பைச் சேர்ந்த சிவனடியார்கள் ஆண்கள், பெண்கள் என 250 பேர், கடந்த 25 -ஆம் தேதி ஊருணியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, ஊருணியின் வடக்குக் கரையில் இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.
Advertisement
Advertisement
இது குறித்து, திருமருதூர் கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், ஆராவயல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல் சார்பு-ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் ராஜாராம், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தேவகோட்டை மண்டல துணை வட்டாட்சியர் நேரு, கண்டதேவி வருவாய் ஆய்வாளர் அனுராதா ஆகியோர், சிலையைக் கைப்பற்றி தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தினர். இந்த சிலையில், ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பொன்னகரம், 27.8.1996 என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சிலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது, எந்த கோயிலுக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.