போடி அருகே மலைக் கிராம மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி
போடி அருகே மலைக் கிராம மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால், பழங்குடியின மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போடி: போடி அருகே மலைக் கிராம மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால், பழங்குடியின மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவர்கள் பாதுகாப்புடன் இருக்க விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். மேலும், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி சார்பில் அரும்புகள் மகிழ் மையம் 2020-2021 என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம், மலைவாழ் மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி முறையில் கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழும் சிறைக்காடு கிராமத்துக்கு தினமும் சென்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
ஆசிரியர் குழுவினர், அங்குள்ள மக்களுக்கு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கின்றனர். பின்னர், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி, கிராம மக்களுக்கு முகக்கவசமும் வழங்குகின்றனர்.
இதனையடுத்து, மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கதை கூறுதல், விடுகதை, புதிர் கேள்விகள் கேட்டல் போன்றவை மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தினமும் ஒரு மணி நேரம் இதுபோன்று பயிற்சி அளிப்பதால், மாணவர்கள் கற்றதை மறக்காமல், பள்ளியில் இருப்பது போன்ற சூழலை உணருகின்றனர். அதே நேரம், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி, சுகாதாரமான முறையில் வாழவும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பள்ளித் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறியது: பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு தயாராகும் வகையில், பாடங்களை மட்டுமின்றி பொது அறிவு உள்ளிட்டவற்றையும் கற்பித்து வருகிறோம். மாற்றுக் கல்வி முறையில் மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி, மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.
சிறைக்காடு மலைக் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் கூறியது: பொது முடக்கம் காரணமாக, வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால், மாணவர்கள் மனதளவில் சோர்வடைந்திருந்தனர். தற்போது, மாற்றுக் கல்வி முறையால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்களுக்கு, பொழுதுபோக்காகவும், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது, பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.