முகப்பு
தமிழ்நாடு

ஏத்தாப்பூர் காவலர் உள்பட 6 பேருக்கு கரோனா 

சேலம் மாவட்டம்  ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் மற்றும் சென்னையிலிருந்து திரும்பிய தம்பதி உட்பட 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 24 ஜூன் 2020, 3:24 pm IST
corona test
பகிர்:

சேலம் மாவட்டம்  ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் மற்றும் சென்னையிலிருந்து திரும்பிய தம்பதி உட்பட 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 24 காவலர்களுக்கும் சளி மாதிரி எடுத்து, கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையத்தில் மணியம்மாள் என்ற பெண் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் சங்கர்(42). என்பவரை, ஏத்தாப்பூர் காவலர்கள் கடந்த 18ந் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement

இவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, சளி மாதிரி எடுத்து கரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கடந்த 19ம் தேதி இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவரிடம் விசாரணை நடத்திய  ஏத்தாப்பூர் போலீஸாரை,  தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து புத்திரகவுண்டன் பாளையத்தில் போட்டோ ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்த ஏத்தாப்பூரைச் சேர்ந்த  29 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று  சனிக்கிழமை உறுதியானது. 

பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த இருவருக்கு, அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதியனதால்,  இரு பேரூராட்சி மற்றும் புத்திரகவுண்டன்பாளையம் கடைவீதி பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தபட்டது.

இந்நிலையில்,  பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்து, கொலைக் குற்றவாளி சங்கரின் இருசக்கர வாகனத்தை ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச்சென்ற, 31 வயது காவலருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 24 காவலர்களுக்கும், புதன்கிழமை சளி மாதிரி எடுத்த ஆரியபாளையம் வட்டார சுகாதாரத்துறையினர், கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுமட்டுமின்றி, சென்னையிலிருந்து திரும்பிய பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த  39 வயது ஆண் மற்றும் 30 வயதான இவரது மனைவிக்கும், ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களோடு தொடர்பிலிருந்த, பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், 21 வயது இளைஞர் மற்றும் கல்லேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 45 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு, புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏத்தாப்பூர் காவலர் உட்பட 6 பேரையும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார சுகாதாரத் துறையினர் பாதுகாப்பாக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.