பள்ளிக்குச் செல்ல பெற்றோர்களின் அனுமதிக் கடிதம்: அரசு வழிகாட்டுதல்களுக்காக பள்ளி நிர்வாகம் காத்திருப்பு
பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், அனுமதிக் கடிதம் குறித்த வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெறவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை: பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், அனுமதிக் கடிதம் குறித்த வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெறவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அக்.1-ஆம் தேதி முதல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளித்து தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்தார். மாணவர்களை, சுயவிருப்பத்தின் பேரில்தான் அனுப்பி வைக்கிறோம் என்று பெற்றோரும் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதற்கென்று பிரத்தியேகமாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிப்பது போன்ற ஒரு கடிதத்தையும் உருவாக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில், இடம்பெற்றுள்ள வாசகத்துக்கு கீழ் பெற்றோர் தங்களுடைய கையொப்பத்தை இடவேண்டும். மேலும் வீட்டு முகவரி, செல்லிடப்பேசி எண், கட்செவி அஞ்சல் எண் ஆகியவற்றையும் அதில் தெரிவிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, "அந்தக் கடிதம் பற்றி இன்னும் பள்ளிகளுக்கு எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வந்துசேரவில்லை. அப்படி வரும்போது, அதனைப் பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை அனுமதிப்போம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையே சில மாணவர்கள் வாங்க வரவில்லை' என்றார்.
Advertisement
Advertisement