நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலைக் கடைகள் முன் அதிமுக பேனர்கள்: திமுக முறையீடு
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்ற கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்ற கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழங்கும் டோக்கன்களில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்களை அச்சிடக்கூடாது என நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், நேற்று பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக் காட்டி, உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை மீறி, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேசன் கடைகள் முன் பேனர்கள் வைத்து ஆளுங்கட்சி இடையூறு ஏற்படுத்துகிறது.
இதுதொடர்பாக வழக்கு தொடரவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அனுமதி கோரினார்.
Advertisement
Advertisement
இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத் தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்தார்.