முகப்பு
தமிழ்நாடு

விவசாயத்தொழிலாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வியாழன் விவசாயத்தொழிலாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். மேலும் அங்குள்ள காலனி பகுதி மக்களுடன் சேர்ந்து மத்திய உணவு சாப்பிட்டார்.

Updated On : 15 ஜனவரி 2021, 1:13 pm IST
பகிர்:



எடப்பாடி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வியாழன் விவசாயத்தொழிலாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். மேலும் அங்குள்ள காலனி பகுதி மக்களுடன் சேர்ந்து மத்திய உணவு சாப்பிட்டார்.

வியாழன் அன்று  தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலும்பாளையத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடிய தமிழக முதல்வர், அன்று மதியம் கார் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

முதல்வர் வரும் வழியில், எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சப்பாணிப்பட்டி காலனிப் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளர்கள் சிலர், சாலையோரம் நின்றிருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர் காரை நிறுத்தச் சொல்லி அவர்களிடம் உரையாடினார்.

Advertisement

Advertisement

எடப்பாடி அடுத்த சப்பாணிப்பட்டி காலனி பகுதியில் தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

அப்போது அவர்கள் தங்கள் காலனிப்பகுதியில் பொங்கல் விழா கொண்டாட இருப்பதாகவும், முதல்வர் அந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பினை ஏற்ற முதல்வர் உடனடியாக அங்குள்ள காலனிப்பகுதிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். 

தொடர்ந்து சப்பாணிப்பட்டி காலனிப்பகுதியில் உள்ள சக்திமாரியம்மன் கோவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்த முதல்வர், கோவில் திடலில், விவசாயக்கூலித்தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு, விவசாயத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் கூவி பொங்கல் விழாவினை கொண்டாடினார். 

அதனைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் தங்களுடன் உணவு அறுந்த வருமாறு அழைத்ததை ஏற்று, அப்பகுதி தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர், தொழிலாளர்கள் கொடுத்த உணவு கிராமத்து வாசனையுடன் சுவையாக இருப்பதாக கூறினார்.

முதல்வர் வந்த செய்தி அறிந்து அங்குகூடிய காலனிப்பகுதி சிறுவர்கள், முதல்வரை தங்களுடன் சேர்ந்து கைபெசியில் சுயப்படம் எடுக்கவேண்டும் என ஆசையுடன் கேட்டனர். இதனை ஏற்று அப்பகுதி தொழிலாளர்களின் குழந்தைகளுடன் முதல்வர் சுயபடம் எடுத்துகொண்டார்.

முதல்வருடன் சுயப்படம் எடுத்துக்கொண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய பாசனத்திட்டத்தின் வாயிலாக கூடுதல் பாசன வசதிகள் பெறும், விளைநிலங்கள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும் நிகழ் ஆண்டில் அப்பகுதியில் நிலவும் நெல்விளைச்சல் குறித்தும், அறுவடைப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் காலனி மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments