தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவர் மாயம்
கல்லிடைக்குறிச்சி தாமிரவருணியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில் தீயணைப்புத்துறையினர் மாணவரைத் தேடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி தாமிரவருணியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில் தீயணைப்புத்துறையினர் மாணவரைத் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் திருமலையப்ப புரத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது ஒரே மகன் சரவணன்(22). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சரவணன் தனது பெற்றோருடன் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். வியாழக்கிழமை காலை கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் பகுதியில் உள்ள தாமிரவருணி படித்துறைக்கு சரவணன் மற்றும் சங்கரலிங்கம் இருவரும் குளிக்கச் சென்றனர்.
ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் நிலையில் சரவணன் திடீரென ஆற்றுநீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் உடனடியாகச் சென்று மீட்பதற்குள் நீரில் மூழ்கி மாயமானார். உடனடியாக அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததையடுத்து மீட்புப்படை வீரர்கள் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய சரவணனைத் தேடி வருகின்றனர்.