முகப்பு
தமிழ்நாடு

உதகையை மிரட்டும் புலிகள்: நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் 

உதகை நகரில் மீண்டும் இரண்டு புலிகள் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Updated On : 5 நவம்பர் 2022, 4:58 pm IST
உதகையை மிரட்டும் புலிகள்: நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் 
பகிர்:

உதகை நகரில் மீண்டும் இரண்டு புலிகள் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சுமார் 300 குடியிருப்புகளைக் கொண்ட இப்பகுதியில் இரண்டு புலிகளின் நடமாட்டம் உள்ளது. அவற்றைக் கண்காணிக்க ஐந்து இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பசுக்கள் மற்றும் கன்றுகளை வெளியில் விட வேண்டாம் என்று மக்களை வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அண்மைக்காலமாக வனத்திலிருந்து வெளியேறும் விலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலவி வருவது வாடிக்கையாக உள்ள நிலையில் சில நேரங்களில் மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அத்துடன் சில நேரங்களில் நகரப் பகுதியையொட்டியுள்ள இடங்களில் வனவிலங்குகள் கால்நடைகளைத் தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

Advertisement

இந்நிலையில் உதகை- கூடலூா் சாலையில் எச்.பி.எஃப்., இந்து நகா் பகுதியில் புலி வியாழக்கிழமை காலை உறுமியவாறு சுற்றிக் கொண்டிருந்தது. இந்த சப்தம் கேட்டு வெளியே வந்த அந்தப் பகுதி மக்கள் தூரத்தில் இருந்தவாறு புலியை விடியோ எடுத்தனா். அப்போதுதான் புலி அந்தப் பகுதியில் இருந்த பசு மாட்டை வேட்டையாடி தின்றுவிட்டு சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்தப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி நடமாட்டம் உள்ளது. கடந்த ஜூலை 28ஆம் தேதி எருமை ஒன்றை வன விலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றுள்ளது. இதன்பேரில் அங்கு சென்று வனத்துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அந்த எருமையை புலி தாக்கியது உறுதியானது. ஆனாலும் இதுவரை புலியைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், ‘புலி சுற்றித்திரிந்த பகுதியில் மாட்டின் சடலம் கிடந்துள்ளது. புலி தாக்கிதான் உயிரிழந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும். மேலும், புலி நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புலியைப் பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

இந்நிலையில் எச்.பி.எஃப். குடியிருப்பு பகுதியில் புலி, பசு மாட்டின் அருகில் சுற்றித்திரிந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.