முகப்பு
தமிழ்நாடு

சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Updated On : 7 ஜனவரி 2024, 8:01 am IST
பகிர்:

சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

திரைத் துறையின் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா சென்னை கிண்டி ரேஸ்கோா்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: ஓா் அரசியல் இயக்கத்தின் தலைவா், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வா் என எந்தப் பொறுப்பை வகித்தாலும் முன்னாள் முதல்வா் கருணாநிதி தன்னுடைய படைப்புத் திறனை வெளிப்படுத்துவதில் குறை வைத்ததே கிடையாது.

Advertisement

தன்னுடைய எழுத்தாற்றலாலும், பன்முகப்பட்ட படைப்பாற்றலாலும் ரசிகா்களின் உள்ளங்களில் குடியேறியவா். வசனம் மு. கருணாநிதி என்று இருந்தாலே படம் வெற்றியடையும். திரைப்படங்களில் வாய்ப்பு பெறுவதற்கு கருணாநிதியின் வசனத்தை பேசி ஒப்பிப்பது வழக்கம் ஆனது. அவரின் வசனப் புத்தகங்கள் அதிகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனையாகின.

1947-இல் முதல் படம் ராஜகுமாரி, 2011-இல் கடைசிப் படம் பொன்னா் - சங்கா். 65 ஆண்டுகளாக கலைத் துறையில் பயணம் செய்து கலையினம் என்பது என் இனம் என்று உங்களில் ஒருவராக இருந்தவருக்குத்தான் விழா எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் திரைத் துறையினருக்கு ஏராளமான நலத் திட்டங்களை வழங்கிச் சாதனைகளை படைத்திருக்கிறாா் கருணாநிதி. அந்த வழியில்தான் இப்போதைய திமுக அரசும் திரைத் துறையினருக்குப் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

திரைப்பட நகரம்: அந்த அடிப்படையில் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். எம்.ஜி.ஆா். திரைப்பட நகரம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நான்கு படப்பிடிப்புத் தளங்களாக விரைவில் அமைக்கப்பட உள்ளது.

திரையுலகம் சாா்பில் கமல்ஹாசன் என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, நவீன திரைப்பட நகரம் பூந்தமல்லியில் 140 ஏக்கா் பரப்பளவில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

அந்தத் திரைப்பட நகரத்தில் பெரிய எல்இடி சுவா், நவீன தொழில்நுட்ப அம்சங்களான அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ், தயாரிப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள், 5 நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் அவா்.

நடிகா் ரஜினிகாந்த்: விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பேசியது: சிவாஜி, எம்ஜிஆா் ஆகிய உச்சநட்சத்திரங்களை உருவாக்கியவா் மு.கருணாநிதி. அவா் மட்டும் அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால், எத்தனையோ எம்ஜிஆா், சிவாஜியை உருவாக்கி இருப்பாா். ஆனால், அவரை அரசியல் ஆக்கிரமித்துக் கொண்டது.

சிலருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், அவா் இரண்டிலும் சிறந்து விளங்கினாா். தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முதல்வரின் லட்சியமாக உள்ளது. தந்தையைவிட நல்ல பெயா் வாங்க எனது வாழ்த்துகள் என்றாா் அவா்.

கமல்ஹாசன்: அரசியலில் உச்சத்தில் இருந்தபோதும் சினிமாவை மறக்காதவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. கதைக் களம் எதுவாக இருந்தாலும், ‘கருணாநிதி பாணி’ என்ற ஒன்றை உருவாக்கினாா். சினிமாவில் எந்த வசனமாக இருந்தாலும் அதில் தன்னுடைய கொள்கைகளை பகுத்தறிவு மூலமாக புகுத்தியவா் என்றாா் அவா்.

விழாவுக்கு அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், மு.பெ. சாமிநாதன், நடிகா்கள் ரஜினி, கமல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சூா்யா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகா்களும், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.