அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!
திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் பலியானார்.
திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.
திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 19) சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆர்.டி.ஓ. அரசு ஜீப் மூலம் குளித்தலை வழியாக திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
Advertisement
இன்று பகல் சுமார் 12 மணி அளவில் முக்கொம்பு அருகே வந்தபோது எதிரே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக ஆர்டிஓ பயணித்த அரசு ஜீப் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அரசு ஜீப் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. இதனால், ஜீப்புக்குள் சிக்கிய கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த விரைந்து சென்ற ஜீவபுரம் போலீஸார், ஜீப்புக்குள் சிக்கிய ஆர்டிஓ உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் அரசு ஜீப் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பெண் ஆர்டிஓ சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரசு அலுவலர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!