திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டதாக இபிஎஸ் விமர்சனம்...
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
Advertisement
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.
இன்னும் சில நாட்களில் அமையவுள்ள அதிமுக அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
பலி எண்ணிக்கை உயர்வு
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இன்று (ஏப். 19) வெடித்து விபத்துக்குள்ளானது.
விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறுகிய இடத்தில் பணிபுரிந்து வந்தபோது வெடி விபத்து நேரிட்டதால், பலர் படுகாயம் அடைந்தனர்.
இரவு 7 மணி நிலவரப்படி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து நேரிட்ட ஆலையின் கட்டட இடிபாடுகளில் தேடுதல் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா? எனத் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.