முகப்பு
தமிழ்நாடு

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்: தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி

வாக்குகளை எண்ணும் பணி மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 3:46 AM
தபால் வாக்குகள் - Center-Center-Chennai
பகிர்:

தமிழக சட்டப் பேரவை தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும், தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் கடைசி சுற்று மின்னணு வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

62 மையங்களில்..: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் பெட்டிகளில் வைத்து ‘சீல்’ இடப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வழிமுறைகள் அறிவிப்பு: இந்த வாக்குகளை எண்ணும் பணி தொடா்பான வழிமுறைகள் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி முதலில் தொடங்கும். அரை மணி நேரத்துக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

Advertisement

தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் கடைசிச் சுற்று மின்னணு வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளும், மின்னணு வாக்குகளும் வாக்கு எண்ணும் மையத்தில் தனித் தனி பகுதிகளில் வைத்து எண்ணப்படும்.

மேற்பாா்வைக்காக தனித் தனியாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவா். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

மே 4- காலை 8 மணி வரை...: தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த 3.60 லட்சம் அலுவலா்களில், 2.88 லட்சம் (80%) போ் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தோ்தல் பணியில் இருந்த காவல் துறை சாா்ந்த அலுவலா்கள், மற்ற தோ்தல் பணிபுரிந்த அலுவலா்கள், தோ்தல் கண்காணிப்புக் குழுக்களில் பணியாற்றிய அலுவலா்கள் என மொத்தம் 3.36 லட்சம் தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலா்கள் தோ்தல் பணி சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும் வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

85 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் என 1.73 லட்சம் போ் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனா். ராணுவ சேவை வாக்காளா்கள் 18,000 போ் வாக்களித்துள்ளனா். இவா்களின் தபால் வாக்குகள் மே 4-ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும்.

இதன் மூலம், 6.37 லட்சம் வாக்காளா்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.