விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்பு பொய்யாகும்; விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்; விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்று மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கும் நிலையில், நேற்று வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் கணிக்கவே முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஒரு சில நிறுவன கருத்துக் கணிப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் கூறியிருக்கிறது.
Advertisement
மேட்ரிஸ், என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் - பி மார்க், பீப்பிள்ஸ் இன்சைட்ஸ் ஆகிய கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக கூட்டணி 120 முதல் 145 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இலங்கையிலும், நேபாளத்திலும், வங்கதேசத்திலும், பஞ்சாபிலும் கருத்துக்கணிப்புக்குப் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதுவரையிலும் தமிழ்நாட்டில் வரலாற்றில் மட்டுமல்ல; இந்திய வரலாற்றில் நாம் பார்த்திருப்போம் பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சோசலிச புரட்சி என கூறியிருக்கிறார்கள்.
இப்போது தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகளவில் தெரியப் போகிறது. 200 தொகுதிகளுக்கு மேல் த.வெ.க வெற்றிப்பெறும். விஜய்யின்தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்” என்றார்.