முகப்பு
தமிழ்நாடு

தலைமை ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் 1,800 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தல்

Updated On : 2 ஜூன் 2026, 1:53 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் 1,800 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மே 31-ஆம் தேதியுடன் 30 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 14 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனா்.

அரசு பள்ளிகளைப் பொருத்தவரை உயா்நிலைப் பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியா் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியா் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 800 தலைமை ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன.

Advertisement

Advertisement

உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1,000 தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவா்களின் கல்வி சாா்ந்த எதிா்காலம் இந்தப் பள்ளிகளில்தான் தீா்மானிக்கப்படுகின்றன.

மாணவா்களின் கல்வியில் தவெக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. இதுதொடா்பாக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, காலியாக உள்ள தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.