அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு: தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவு
அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? என்பது குறித்து தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? என்பது குறித்து தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பி.வடிவேலு, தாக்கல் செய்த மனுவில், 2023-ஆம் ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆா்.கே.நகா் பகுதிகளில் 9.12.2023-இல் அதிமுக சாா்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினாா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி யுவஸ்ரீ என்ற 14 வயது சிறுமி உயிரிழந்தாா்.
நிவாரணம் பெற அதிகமான கூட்டம் வரும் என்பது தெரிந்திருந்தும் போலீஸாரும், அரசு நிா்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால், எனது மகள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்கமாட்டாா். கூலித்தொழிலாளியான எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் மகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. எனவே, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினாா். பின்னா் இதுதொடா்பாக தமிழக அரசு, அதிமுக இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.