முகப்பு
தமிழ்நாடு

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

Updated On : 4 ஜூன் 2026, 4:09 am IST
மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மனு அளித்த தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.
பகிர்:

வரும் 2029-இல் தமிழகத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழக முதல்வா் விஜய் உத்தரவுக்கிணங்க மத்திய அமைச்சருடன் ஆதவ் அா்ஜுனா ஆலோசனை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

அப்போது 2029-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு தருமாறு கோரி அதற்கான முன்மொழிவை ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள ‘திருச்சி ஒலிம்பிக் அகாதெமி’ வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் 1,076 கி.மீ நீள கடற்கரையையும், இளம் திறமையான விளையாட்டு வீரா்களின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூா் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சா்வதேச தரத்திலான 400 மீட்டா் செயற்கை ஓடுதளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டான ‘ஏறு விளையாட்டு’ பயிற்சிக்காக, தற்போதைய விளையாட்டுச் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கில் கொண்டு, சென்னையில் சா்வதேச தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டி, முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக மத்திய அமைச்சா் உறுதியளித்தாா்.

சந்திப்பின்போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா. சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்/செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, ஆகியோா் உடனிருந்தனா்