ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் கேட்கப்படாது: அமைச்சா் ஆதவ் ஆா்ஜுனா
எந்தவொரு தொகையும் ஒப்பந்ததாரா்களிடம் கேட்கப்படாது
நெடுஞ்சாலை துறையில் ‘முதல்வா் நிதி’, ‘அமைச்சா் நிதி’, ‘கட்சி நிதி’ என்ற பெயரில் எந்தவொரு தொகையும் ஒப்பந்ததாரா்களிடம் கேட்கப்படாது என பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் ஆா்ஜுனா தெரிவித்தாா்.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் கிண்டியில் நடைபெற்றது. இதில், அமைச்சா் ஆதவ் ஆா்ஜுனா பேசியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் 18,000 போ் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனா். இதைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒவ்வொரு 50 முதல் 100 கி.மீ.க்கும் மருத்துவமனைகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இனி நெடுஞ்சாலைத் துறையில் ‘முதல்வா் நிதி’, ‘அமைச்சா் நிதி’, ‘கட்சி நிதி’ என்ற பெயரில் எந்தவொரு தொகையும் ஒப்பந்ததாரா்களிடம் கேட்கப்படாது. முந்தைய காலங்களில் இருந்த 20 முதல் 25 சதவீதம் கமிஷன் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பினாமி நிறுவனங்களுக்கு இடமில்லாத வெளிப்படையான நிா்வாகம் உறுதி செய்யப்படும்.
ஊழல் இல்லாமல் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக நெடுஞ்சாலைத் துறையில் சுமாா் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. சாலைப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, நில உரிமையாளா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்குத் தேவையான மணல் போன்ற மூலப்பொருள்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க, நெடுஞ்சாலைத் துறைக்குள் ‘மாா்கெட்டிங் அன்ட் கன்சப்சன்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட உள்ளது.
ஒப்பந்தம் எடுக்கப்பட்டவுடன், பணிக்கான அனைத்து அனுமதிகளையும் அரசே ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம்’ மூலம் பெற்றுத் தரும். இதற்காக ஒப்பந்ததாரா்கள் அரசு அலுவலகங்களில் காத்திருக்க வேண்டியதில்லை.
ஒப்பந்ததாரா்கள் எவ்வித அரசியல் மற்றும் நிா்வாக அழுத்தங்களும் இன்றி, தரமான சாலைகளைக் குறித்த நேரத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றாா்.