தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு
தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 2023-ஆம் ஆண்டு அறிவித்தது.
Advertisement
அதன்படி தமிழகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் 7,731 மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும்; எனினும், ஏற்கெனவே அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 12,650 மாணவா் சோ்க்கை இடங்களால், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ, மாணவா் சோ்க்கை இடங்களை அதிகரிக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், புதிய விதிமுறையைக் கைவிடுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. இதன்மூலம் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை, குறிப்பாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,550 மாணவா்கள் கூடுதலாக மருத்துவம் படிக்க இயலும்.
அதன்படி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை, பெரம்பலூா், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். இன்னும் சில நாள்களில் புதிய அரசு அமைந்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.