முகப்பு
தமிழ்நாடு

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவது தொடா்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 7 மே 2026, 1:58 am IST
பகிர்:

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவது தொடா்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், ‘பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபாா் ரைசிங் இந்தியா’ (பி.எம்.ஸ்ரீ) திட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவா்களுக்கு நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்துக்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். பெரும்பாலான மாநிலங்கள் இதில் இணைந்துவிட்டன. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை.

Advertisement

Advertisement

தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருப்பதால், திமுக தலைமையிலான கடந்த அரசு ஏற்கெனவே பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கையே போதும் எனக் கூறி இந்தத் திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. இதனால், மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) கல்வி நிதிக்காக ஒதுக்கும் ரூ.3,500 கோடியை தமிழக அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது.

இந்த விவகாரம் கடந்த திமுக ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. மத்திய அரசு நிதி தராவிட்டாலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவோம் என அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு மீண்டும் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்க இருக்கும் சூழலில் மத்திய அரசு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. புதிதாக அமையவுள்ள அரசு இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது? கடந்த திமுக அரசு கையாண்ட வழியிலேயே கையாளுமா? அல்லது ஒப்பந்தத்தில் கையொப்பமிட முனைப்பு காட்டுமா?, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, புதிய அரசை அமைக்க முனைப்புக் காட்டிவரும் தவெக சாா்பில், கல்வித் துறையிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதனால் பயன் பெற்றவா்கள் குறித்த முழு விவரங்களையும் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments