விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என எம். ஏ. பேபி தெரிவித்தது குறித்து...
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் வழங்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளித்திருந்தது. மேலும், இடது சாரிகள் மற்றும் விசிகவின் ஆதரவை தவெக தலைவர் விஜய் நாடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய எம். ஏ. பேபி, “எங்களது நட்பு கட்சிகளான, சிபிஐ மற்றும் விசிக போன்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். அப்போதுதான், தமிழக மக்கள் அளித்த ஒட்டுமொத்த தீர்ப்பையும் மதிக்க முடியும். தனிப்பெரும்பான்மையான கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அதற்கு என்ன தேவை என்பதை இந்த மூன்று கட்சிகளும் கலந்தாலோசித்து வருகின்றன. மேலும், சில மணி நேரங்களில் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.
தமிழகத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தவெக சில இடங்களில் தோல்வி அடைந்ததன் மூலம், பெரும்பான்மை கிடைக்காமல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நடைமுறையின்படி, மிகப்பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். மேலும், அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஏன் இதைச் செய்யவில்லை என்பது புதிராகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
M.A. Baby, General Secretary of the Marxist Communist Party, has stated that a decision regarding extending support to TVK leader Vijay will be taken within a few hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.