அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்காததன் காரணம் பற்றி..
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகிறார்.
இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களில் இறுதியாக வந்த கீர்த்தனா, பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழைக் கொண்டு வராததால் எம்எல்ஏவாகப் பதவியேற்க முடியவில்லை.
முதல்வர் பதவியேற்பு விழாவில் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவர் கீர்த்தனா. இன்று காலை புதிதாகத் தேர்வான உறுப்பினர்களை பதவியேற்க ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அப்போது கீர்த்தனாவை பதவியேற்க அழைக்கப்பட்ட நிலையில், அவரிடம் வெற்றிச் சான்றிதழ் இல்லாததால், அவர் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்ளவில்லை.
Advertisement
இதையடுத்து, அடுத்தடுத்து உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாகவும், ஓ. பன்னீர்செல்வமும் போடி எம்எல்ஏவாகவும் பதவியேற்றுக் கொண்டனர். திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.