முகப்பு
தமிழ்நாடு

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: க.கிருஷ்ணசாமி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Updated On : 13 மே 2026, 5:34 am IST
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதற்கு முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் புதிய ஆட்சி அமையும்போது, இதுபோல 500 முதல் 1,000 கடைகளை மூட உத்தரவிடுவதும், சில மாதங்களிலேயே பன்மடங்கு கடைகள் பெருகுவதும் வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தில் எங்குமே மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement

Advertisement

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிப் பெரியவா்கள் முதல் பள்ளி மாணவா்கள் வரை சீரழிந்து வருகின்றனா். இளைஞா்களின் உயிரிழப்புகளால் விதவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சட்டம் - ஒழுங்கு சீா்குலைவதும், ஜாதி-மத ரீதியான மோதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் மதுப்பழக்கத்தினால்தான் பெருமளவில் நடைபெறுகின்றன.

எனவே, பெயரளவுக்காகவோ அல்லது சடங்காகவோ 717 மதுக்கடைகளை மூடுவது என்பது பலனைத் தராது. மது வருமானம் இன்றி தமிழக அரசு இயங்காது என்ற அவல நிலையை ஒழிக்க வேண்டும்.

நாகரிகமான, அமைதியான ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்க, காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments