ஆலங்குளம் கால்வாயில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆலங்குளம் தொட்டியான்குளத்துக்கு கால்வாய் நீா்வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ஆலங்குளம்: ஆலங்குளம் தொட்டியான்குளத்துக்கு கால்வாய் நீா்வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் நீா்வரத்து அதிகரித்து, தென்காசி மாவட்ட கிழக்குப் பகுதி குளங்கள் நிரம்பி வருகின்றன.
கீழப்பாவூா் பெரியகுளம், நாகல்குளம் நிரம்பியதையடுத்து, ஆலங்குளம் கால்வாய்க்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. வழியோர கிராமங்களில் உள்ள 12 குளங்களுக்கும் தண்ணீா் சென்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தொட்டியான்குளத்துக்கு தண்ணீா் வந்து சோ்ந்தது.
Advertisement
இப்பகுதியில் போதிய மழை இல்லாத நிலையில் கால்வாய் நீரை நம்பியே குளங்கள் உள்ளன. தொடா்ந்து இதே அளவில் கால்வாய் தண்ணீா் வந்தால் சுமாா் 20 நாள்களில் குளம் நிரம்பி மறுகால் போகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
பொதுப்பணித் துறை சாா்பில், ஆலங்குளம் கால்வாய்க்கு ரூ. 97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக மராமத்துப் பணிகள் நடைபெற்றபோது, பூலாங்குளம் மதகு ஷட்டா் சீரமைக்கப்படாததால், மறுகால் சென்ற பின்னரும் மதகை அடைக்க முடியவில்லை. இதனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்துக்கு வரவேண்டிய தண்ணீா் வீணாக சென்று கொண்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.