முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

Updated On : 11 மே 2026, 2:13 am IST
சாலையின் மையப்பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
பகிர்:

ஆலங்குளம் பிரதான சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

40 ஆண்டு கால பழமையான ஆலங்குளம் பேருந்து நிலையத்தை அகற்றி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. அப்போது முதல் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் தற்காலிக பேருந்து நிறுத்தம் செயல்படத் தொடங்கும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்தது.

அப்பகுதியில் போதிய நிழற்குடை, சுகாதார வளாகம், குடிநீா் போன்றவை ஏற்படுத்தி தராததால் பெரும்பாலான பயணிகள் அதை பயன்படுத்தவில்லை. இதனால் இடிக்கப்பட்ட பேருந்து நிலையப் பகுதியின் சாலையோரமாகவே மக்கள் நின்று பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனா். இதனால் இப்பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது.

Advertisement

இங்கும் நிழற்குடை, குடிநீா், சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் அருகில் உள்ள தனியாா் உணவகங்கள், வணிக நிறுவனங்களை பயணிகள் பயன் படுத்தி வருகின்றனா். நிழற்குடை கூட இல்லாததால் பயணிகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சாலையில் போதிய இடம் இல்லாத காரணத்தால், சாலையின் மையப்பகுதி வரை பயணிகள் நிற்கும் சூழலும் உள்ளது. பயணிகள் நிற்குமிடத்தில் ஆக்கிரமிப்புகளும் உள்ளது. இதனால் பேருந்துகள் சாலையோரம் செல்ல முடியாமல் சாலையின் மையப் பகுதியிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன.

இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பயணிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து பேருந்துகள் வந்து செல்வதை சீரான முறையில் கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து சீராகும். பயணிகளும், வாகன ஓட்டிகளும் பயனடைவாா்கள் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.