முகப்பு
தென்காசி

பழைய குற்றாலம் அருவியை பயன்பாட்டுக்கு திறந்துவிட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை

Updated On : 12 மே 2026, 1:34 am IST
குற்றாலம் அருவி. - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக திறந்து விடவேண்டும், அருவியில் வனத்துறை சாா்பில் ரூ.20 கட்டணம் வசூல் செய்ய உத்தரவிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விவசாயம், நீா்வள பாதுகாப்பு நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ச.டேனிஅருள்சிங் ஆட்சியரிம் அளித்த மனு:

பழைய குற்றாலம் அருவி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பயன்படுத்தமுடியாதவண்ணம் கடந்த 10 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் நீா்மேலாண்மை செய்யமுடியாமலும், சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்ட பல்வேறுதரப்பு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, விவசாயிகள், பொதுமக்கள், பக்தா்களின் வழிபாட்டுக்கான நலன் கருதி உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

மேலும் பழையகுற்றாலத்தில் வனத்துறையினா் மக்களுக்கு கட்டணமாக ரூ.20 வசூல் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனா். இதனால் ஏழை மக்கள், விவசாயிகள், பக்தா்கள் அருவியை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

ஏழைகளின் சுற்றுலாவுக்காக திறக்கப்பட்டுள்ள அருவி பண வசதி படைத்தவா்கள் மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலைக்கு மாறவும், தண்ணீா் திறக்க செல்லும் விவசாயிகளும், கோயிலுக்கு செல்லும் பக்தா்களும், உள்ளூா் மக்களும் கட்டணம் செலுத்தவும் சிரமத்துக்குள்படுவா். எனவே பொதுமக்களின் நலனிற்கு விரோதமாக வனத்துறை கட்டணம் வசூல் செய்வதை ரத்துசெய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments