திருத்தணியில் 5 பஸ் கண்ணாடிகள் உடைப்பு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருத்தணியில் 4 அரசு பஸ்கள் உள்பட 5 பஸ்களின் கண்ணாடிகள் செவ்வாய்க்கிழமை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருத்தணியில் 4 அரசு பஸ்கள் உள்பட 5 பஸ்களின் கண்ணாடிகள் செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தப்பட்டன.
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு திருத்தணி - பைபாஸ் சாலையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
இந்நிலையில், இரவு 10 மணியளவில் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமம் அருகே சென்னை - திருப்பதி செல்லும் அரசு பஸ் (தடம் எண் 201), திருத்தணி - அருங்குளம் செல்லும் அரசு பஸ் (தடம் எண் 45அ) மற்றும் தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஆகிய 3 பஸ்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்துவிட்டு தப்பிவிட்டனர்.
அதே போல், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிராமம் அருகே புதன்கிழமை காலை 8 மணியளவில், திருத்தணியில் இருந்த மகான்காளிகாபுரம் சென்றுக் கொண்டிருந்த தடம் எண் 48, 52 ஆகிய இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடிகளும் சிலரால் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு மேல் திருத்தணி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் பஸ்களுக்காக காத்திருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதே போல், புதன்கிழமை அதிகாலை திருத்தணியில் இருந்து சென்னை, திருப்பதி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டிய அரசு பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர்.
பின்னர் காலை 6 மணிக்கு மேல் பஸ்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.
பொன்னேரியிலும் பஸ்கள் இயங்கவில்லை:
ராமதாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னேரியிலும் புதன்கிழமை அதிகாலை அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்கு பிறகே பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.