கணவரை ஒப்படைக்கக் கோரி பெண் சாலை மறியல்
காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திருவள்ளூரில் புதன்கிழமை இளம்பெண் ஒருவர் திடீர்
காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திருவள்ளூரில் புதன்கிழமை இளம்பெண் ஒருவர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இளம்பெண் ஒருவர் சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்தார்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கடை வைத்திருந்த பெண்கள் சிலர், அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரித்தனர்.
Advertisement
இதில், அந்தப் பெண்ணின் பெயர் முத்துச்செல்வி (35) என்றும், எம்.எஸ்.சி., எம்.ஃபில் படித்துவிட்டு திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரது கணவர் சந்திரசேகர் (42), கடந்த ஏப்ரல் மாதம் 2 குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார்.
இது குறித்து புகார் அளித்தும் போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இது குறித்து மணவாளநகர் போலீஸாரிடம் கேட்ட போது, அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், கணவர், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரது கணவர் எங்கோ சென்றுவிட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து நாங்கள் அவரை தேடி வருகிறோம் என்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.