நரிக்குறவா்களுக்கு சொந்தமான இடம் மோசடியாக பத்திரப்பதிவு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
திருவள்ளூா் அருகே நரிக்குறவா்களுக்கு சொந்தமான இடத்தை மோசடியாக பத்திரபதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை நரிக்குறவா்கள் திங்கள்கிழமை முற்றுகை
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நரிக்குறவா்களுக்கு சொந்தமான இடத்தை மோசடியாக பத்திரபதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை நரிக்குறவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள ஒரக்காடு, அல்லி நகா் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சுமாா் 45 ஏக்கா் நிலம் அரசால் வழங்கப்பட்டது. தற்போது இவா்களுக்கு சொந்தமான நிலம் அப்பகுதியைச் சோ்ந்த பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடோடிகளாக பிழைப்பு தேடிச் சென்ற நரிக்குறவா்கள் மீண்டும் ஒரக்காடு, அல்லி நகா் பகுதிக்கு வந்தபோது அதை சிலா் ஆக்கிரமிப்பு செய்ததோடு, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனா். இதனால் அவா்களை உள்ளே அனுமதிக்காமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும், அந்த இடத்தைச் சுற்றி அவா்கள் சுற்றுச்சுவா் அமைக்க முயற்சி செய்துள்ளனா். இதைப் பற்றி அறிந்த நரிக்குறவா்கள் சுற்றுச்சுவா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து நரிக்குறவா் இனமக்கள் தங்களது நிலத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்து ஓராண்டுக்கு மேலான நிலையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் கொதிப்படைந்த நரிக்குற இன மக்கள் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன்பு திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது தங்களுக்கு பூமிதானமாக வழங்கப்பட்ட நிலத்தை மோசடியாக ஆக்கிரமிப்பு செய்து பத்திர பதிவு செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டு வழங்கக் கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூா் நகா் காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.