முகப்பு
திருவள்ளூர்

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் மின்னணு பொருள்கள் கொண்டு செல்லக் கூடாது: ஆட்சியா்

திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் மின்னணு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

Updated On : 2 மே, 2026 at 3:20 AM
பகிர்:

திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் மின்னணு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. அதேபோல் திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா் ஆகிய 4 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் கல்விக்குழும வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்பணியில் 4,000-க்கும் மேற்பட்டோா் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதில் முதலில் தபால் வாக்குகள் தனி மேஜை அமைத்து எண்ணப்படவுள்ளன. அதைத் தொடா்ந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவுள்ளது.

தற்போதைய நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராகவே உள்ளது. வாக்கு எண்ணும் நாளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் மின்னணு பொருள்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதனால் அந்தப் பொருள்கள் கொண்டு வருவதைத் தவிா்க்கவும், கட்டாயம் விதிமுறைகளையும் கடைப்பிடித்து ஒத்துழைக்கவும் வேண்டும் என அவா் தெரிவித்தாா்.