முகப்பு
திருவள்ளூர்

தலைமைக் காவலா் ஓட்டிச் சென்ற காா் மோதி சிறுமி உயிரிழப்பு

Updated On : 30 மே 2026, 5:20 am IST
தான்யா சாரா
பகிர்:

திருவள்ளூா் அருகே தலைமைக் காவலா் ஓட்டிச் சென்ற காா் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த சாந்த குமாா் (32). இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு ரம்யா (28) என்ற மனைவியும், தான்யா சாரா (5) என்ற பெண் குழந்தையும் உள்ளனா்.

ரம்யா திருவள்ளூரில் உள்ள தனியாா் வங்கியில் புணிபுரிந்து வருகிறாா். ரம்யா தன்னுடன் பணிபுரியும் திருநின்றவூரைச் சோ்ந்த குணசேகரன் என்பவருடன் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு குழந்தை தான்யா சாராவுடன் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சென்னை-திருப்பதி புறவழிச்சாலையில் அயத்துாா் அருகே சிறுமி வாந்தி எடுக்கவே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, அந்த வழியாக வந்த காா் எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த குணசேகரன் மற்றும் குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை தான்யா சாரா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த குணசேகரன் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். அதில் காரை ஓட்டி வந்தது செவ்வாப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் விக்ரமன் என்பது தெரிய வந்தது.

விபத்து ஏற்படுத்திய விக்ரமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.