முகப்பு
திருவாரூர்

பயிா்களுக்கு நிவாரணம் கோரி திருவாரூரில் மாா்க்சிஸ்ட் நாளை சாலை மறியல்

டெல்டா மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:08 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

டெல்டா மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன. 18) சாலை மறியல் நடைபெறும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கூறியது:

கடந்த ஒரு வாரகாலமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் தொடா் மழையால், வயல்கள் மழை நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டன. வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை. மேலும் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன.

Advertisement

இந்நிலையில், நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 600 கோடி வழங்கப்படும், நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் உறுதியளித்திருந்தாா்.

ஆனால், அது இன்னும் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடையாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்து வரும் கனமழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணமாக தமிழக அரசு வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை நூற்றுக்கணக்கான இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.