FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமனம்

இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமனம்

Updated On : 14 ஜூன் 2026, 6:31 am IST
தீரஜ் சேத்
பகிர்:

இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதியின் பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பணிமூப்பு கொள்கையின்படி இந்த நியமனத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ராணுவ துணை தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வரும் தீரஜ் சேத், ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுகிறாா். ஜூன் 30-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றுக் கொள்வாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ராணுவத்தை நவீனப்படுத்தவும், வலுப்படுத்துவதற்குமான வியூகத் திட்டங்களை வகுப்பவராக அறியப்படும் தீரஜ் சேத் 1986, டிசம்பா் மாதம் ராணுவத்தில் இணைந்தாா்.

கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவரான இவா், 40 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளாா்.

பாலைவனப் பகுதிகள், மேற்குப் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீா் என நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதமேந்திய படைகளை வழிநடத்தியுள்ளாா்.

லெப்டினன்ட் ஜெனரலாக, ராணுவத்தின் அதிதிறன் மிக்க தாக்குதல் படைகளில் ஒன்றான ‘சக்ரா காா்ப்ஸ்’ படையை வழிநடத்தியுள்ளாா். தில்லி பகுதியில் கமாண்ட் அதிகாரியாக பதவி வகித்தபோது தேசிய மற்றும் சா்வதேச ராணுவ ஒத்துழைப்புகளுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளாா்.

ராணுவ கமாண்டராக பதவி உயா்வு பெற்ற பிறகு தென்மேற்கு கமாண்ட் மற்றும் தெற்கு கமாண்ட் என ஒரே நேரத்தில் இரண்டு பகுதிகளில் ராணுவ கமாண்டை மேற்கொண்டவா் என்ற அரிய பெருமையையும் பெற்றுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments