மழை பாதிப்பு: நிவாரணம் கோரி ஜன 18-இல் சாலை மறியல்; மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு
திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்
திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (ஜன.18) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:
நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழுமையாக வழங்கப்படாத நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் உள்ளனா்.
Advertisement
எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்களுடன் ஊா்வலமாக சென்று வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.