ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி! சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்வு
வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வியாழக்கிழமை சூடுபிடித்து காணப்பட்டது. இதன் காரணமாக சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்தது.
வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வியாழக்கிழமை சூடுபிடித்து காணப்பட்டது. இதன் காரணமாக சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்தது.
நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், பணவீக்கத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை என தெரிவித்தது. மேலும், நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று நிதிக் கொள்கையில் ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கி குவித்தனர்.
இதையடுத்து, வங்கித் துறை குறியீட்டெண் 2.78 சதவீதமும், ரியல் எஸ்டேட் 2.55 சதவீதமும், மோட்டார் வாகனத் துறை குறியீட்டெண் 1.76 சதவீதமும் அதிகரித்தன.
கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கின் விலை 3.38 சதவீதமும், யெஸ் வங்கி 2.36 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 4.66 சதவீதமும், பெடரல் வங்கி 2.36 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 3.02 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடா வங்கி பங்கின் விலை 5.72 சதவீதமும் ஏற்றம் கண்டன.
ரியல் எஸ்டேட் துறையைப் பொருத்தவரையில், கோத்ரெஜ் ப்ராப்பர்ட்டீஸ் பங்கின் விலை 1.46 சதவீதமும், பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜக்ட்ஸ் 3.03 சதவீதமும், ஓபராய் ரியால்டி 0.38 சதவீதமும் அதிகரித்தன.
மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்கின் விலை 1.88 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.22 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.22 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் அதிகரித்து 33,596 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 10,325 புள்ளிகளாக நிலைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.