ரிலையன்ஸ் உடன் ஓபன் ஏஐ, மெட்டா பேச்சுவார்த்தை!
ரிலையன்ஸ் உடன் சேர்ந்து செய்யறிவு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை.
இந்தியாவில் செய்யறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓபன் ஏஐ மற்றும் மெட்டா நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ரிலையன்ஸ் உடன் சேர்ந்து செய்யறிவு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சேட்ஜிபிடி என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கியது. இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இதேபோன்று மெட்டா நிறுவனமும் மெட்டா ஏஐ என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் தங்கள் செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
இந்தியா போன்ற மிகப்பெரிய மற்றும் அதிக இளைஞர்களைக் கொண்ட சந்தையில் செய்யறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அதனை விரிவுபடுத்த இந்த இரு நிறுவனங்களும் அம்பானியுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சேட்ஜிபிடி-க்கான சந்தா மானியத்தைக் குறைக்க தனது நிறுவன ஊழியர்களுடன் ஓபன் ஏஐ பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது மாதத்திற்கு 20 டாலர்கள் (ரூ. 1,720) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் சந்தாவுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து பேசவில்லை எனத் தெரிகிறது. இதன்மூலம் ரிலையன்ஸ் உடன் சேர்ந்தால், கட்டண குறைப்பின்றி அதிக மக்களை சென்றடைய முடியும் என ஓபன் ஏஐ கருதுவதாகத் தெரிகிறது.
ஓபன் ஏஐ மாடல்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்வது குறித்து முகேஷ் அன்பானியுடம் விவாதித்ததாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிக்க | ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!
இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!