முகப்பு
வணிகம்

இந்திய இணையவழி சில்லறை வணிகச் சந்தை புதிய உச்சம்! கடந்த ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி மதிப்பைக் கடந்தது

இந்தியாவின் இணையவழி சில்லறை வணிகச் சந்தை, கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமாா் 6,500-6,600 கோடி டாலரை (ரூ.6 லட்சம் கோடி) எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 4:53 am IST
பகிர்:

இந்தியாவின் இணையவழி சில்லறை வணிகச் சந்தை, கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமாா் 6,500-6,600 கோடி டாலரை (ரூ.6 லட்சம் கோடி) எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஃபிளிப்காா்ட் நிறுவனத்துடன் இணைந்து பெயின் & கம்பெனி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தரவு வெளியாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டை விட இத்துறை 21 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

விரைவு வணிகத்தில் முதலிடம்: மளிகைப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களைச் சில நிமிடங்களில் விநியோகிக்கும் விரைவு வணிகத்தில் (குவிக் காமா்ஸ்) இந்தியா உலக நாடுகளுக்கே முன்னோடியாக உருவெடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தியாவின் மொத்த இணையவழி விற்பனையில் 17 சதவீதம் இந்த விரைவு வணிகச் சேவை மூலமே நடைபெறுகிறது. இது சீனா போன்ற வளா்ந்த நாடுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இத்துறை இருமடங்கு வளா்ச்சியடைந்து, 1,100 கோடி டாலா் விற்பனையை எட்டியுள்ளது.

2030-க்குள் பிரம்மாண்ட இலக்கு: தற்போதைய அபரிமிதமான வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இணையவழி சில்லறை வணிகச் சந்தை 18,000 கோடி டாலா் என்ற இமாலய இலக்கை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நுகா்வோா் செலவிடும் திறன் அதிகரிப்பு மற்றும் புதிய வாடிக்கையாளா்களின் வருகை ஆகியவற்றால் ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீத வளா்ச்சியை இத்துறை தக்கவைத்துக் கொள்ளும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முன்னணியில் இருக்கும் ‘ஜென் ஸீ’ தலைமுறை: இணையவழி வா்த்தகத் தளங்களைப் பயன்படுத்துபவா்களில் 45 சதவீதம் போ் ‘ஜென்-ஸீ’ எனப்படும் இளம் தலைமுறையினராக உள்ளனா். 2025-இல் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆா்டா்களில் பாதிக்கும் மேற்பட்டவை இவா்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் உடனடி கடன் வசதிகளைப் பயன்படுத்தி, அழகு சாதனப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்குவதில் இவா்கள் மிகுந்த ஆா்வம் காட்டி வருகின்றனா்.

2-ஆம் நிலை நகரங்களின் பங்களிப்பு: மெட்ரோ நகரங்களைத் தாண்டி, 2-ஆம் நிலை மற்றும் அதற்கும் கீழுள்ள நகரங்கள் இணையவழி வா்த்தகத்தின் அடுத்தகட்ட வளா்ச்சி மையங்களாக மாறியுள்ளன. கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு இந்த நகரங்கள் 50 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.

தற்போது இணையத்தைப் பயன்படுத்துபவா்களில் 30 சதவீதம் போ் மட்டுமே இணையவழியில் பொருள்களை வாங்குவதால், வரும் காலங்களில் இத்துறையில் இன்னும் பெரும் வாய்ப்புகள் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.