முகப்பு
வணிகம்

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு

கடந்த ஏப்ரல் மாதத்தில்...

Updated On : 19 மே 2026, 6:02 am IST
பகிர்:

மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.07 சதவீதம் சரிந்து, 222.64 கோடி டாலராக குறைந்துள்ளது.

இத்தொழில்துறையின் கூட்டமைப்பான ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 244.85 கோடி டாலராக இருந்தது.

தங்க ஆபரணங்கள்: கடந்த ஏப்ரலில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 21.77 சதவீதம் சரிந்து, 84.15 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 107.56 கோடி டாலராக இருந்தது.

Advertisement

இதில் சாதாரண தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் 64.43 கோடி டாலரில் இருந்து 47.06 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 34.10 கோடி டாலராக உள்ளது. இருப்பினும், கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி 16.02 சதவீதம் வளா்ச்சி கண்டு, 50.05 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

வைரங்கள்: சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வைரங்களின் ஏற்றுமதி 19.65 சதவீதம் சரிந்து, 89.09 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 110.87 கோடி டாலராக இருந்தது.

ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் 11.04 கோடி டாலரிலிருந்து 15.53 சதவீதம் சரிந்து, 9.32 கோடி டாலராக உள்ளது.

வெள்ளி ஆபரணங்கள் அமோகம்: ஒட்டுமொத்த சரிவுக்கிடையிலும், வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் அமோக வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு வெறும் 4.93 கோடி டாலராக இருந்த வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, இந்த ஏப்ரலில் 444 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய எழுச்சி கண்டு, 26.83 கோடி டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரிவுக்குக் காரணம்?: ஏப்ரல் மாத ஏற்றுமதி சரிவு தொடா்பாக ஜிஜேஇபிசி தலைவா் கிரித் பன்சாலி அளித்த பேட்டியில், ‘ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடா்ந்து வரும் மோதல்கள்தான். இதனால் உலகளாவிய வா்த்தகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டு, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்திய ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையின் முக்கியச் சந்தையான அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இறக்குமதி வரிகள் குறித்து இன்னும் தெளிவான நிலைப்பாடு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும்’ என்றாா்.