ஜிடிபி-ல் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.6%-ஆக குறையக்கூடும்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது 1.6%-ஆகக் குறையக்கூடும் என்பது குறித்து
புது தில்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது 1.6%-ஆகக் குறையக்கூடும்; நடப்பு 2026-27 நிதியாண்டில் பணம் செலுத்துதல் சமநிலை உபரி நிலைக்குத் திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் மேம்பட்ட ஏற்றுமதி ஆகியவை வெளிநாட்டு வர்த்தகத் துறைக்கு ஆதரவளிப்பதால், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது 1.6 சதவீதமாகக் குறையக்கூடும் என ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
Advertisement
Advertisement
நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 18 சதவீதம் அதிகரித்து, சாதனை அளவான 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாகவும், இதில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 55% உயர்வு மற்றும் எண்ணெய் அல்லாத ஏற்றுமதி ஆண்டுக்கு 12% உயர்வு ஆகிய இரண்டும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2025-ல் 5.4 பில்லியன் டாலராக இருந்த எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 8.4 பில்லியன் டாலராகக் கணிசமாக அதிகரித்திருந்தாலும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் (மாதாந்திர அடிப்படையில்) 12 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அதே வேளையில், எண்ணெய் அல்லாத ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் மற்றும் மாதாந்திர அடிப்படையில் 8.3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, 24 மாதங்களில் இல்லாத அளவாக 36.8 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
மேலும், விவசாயப் பொருள்கள் ஆண்டுக்கு 8.8% உயர்வு மற்றும் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆண்டுக்கு 6.7% உயர்வு ஆகியவை கடந்த இரண்டு மாதங்களாகக் காணப்பட்ட சரிவிலிருந்து மீண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், "எண்ணெய் மற்றும் தங்கம் அல்லாத இறக்குமதிகள் மே மாதத்தில் 47 பில்லியன் டாலராக இருந்தது; இது ஆண்டு அடிப்படையில் 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் 28.4 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, மே மாதத்தில் ஏறக்குறைய அதே அளவில் 28.2 பில்லியன் டாலராக இருந்தது, முந்தைய மாதத்தில் 9.0 பில்லியன் டாலராக இருந்த எண்ணெய் வர்த்தகப் பற்றாக்குறை 14.3 பில்லியன் டாலராக அதிகரித்த போதிலும், எண்ணெய் மற்றும் தங்கம் அல்லாத வர்த்தகப் பற்றாக்குறை 13.7 பில்லியன் டாலரிலிருந்து 10.5 பில்லியன் டாலராகக் குறைந்ததும், அதேவேளையில் தங்க இறக்குமதி 2.2 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டதும் அந்த அதிகரிப்பை ஈடுசெய்தன.
ரிசர்வ் வங்கியின் மாதாந்திர மதிப்பீட்டின்படி, ஏப்ரல் 2025-இல் 4.8 பில்லியன் டாலர் பற்றாக்குறையாக இருந்த நாட்டின் நடப்புக் கணக்கு, ஏப்ரல் 2026-இல் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் உபரி நிலைக்கு மாறியுள்ளது. எனவே, நடப்பு ஆண்டில் 'கட்டணச் சமநிலை' உபரி நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் கூடுதல் வரத்துகளுக்கு வழிவகுக்கும் என்று ஐசிஐசிஐ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவி போர் பதற்றத்தால் சமீபத்திய முன்னேற்றங்கள் சாதகமான சூழலை உருவாக்கி, கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு சுமார் 83 அமெரிக்க டாலர் என்ற நிலைக்குக் குறைத்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 85 அமெரிக்க டாலர் என்ற அளவில் நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய மதிப்பீடுகளை விடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது; அதேவேளையில் ஏற்றுமதியும் ஊக்கமடையும். சில நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும், எண்ணெய் விலை அதிகமாகவும் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கான ஏற்றுமதி குறைவாக இருந்தால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 2 சதவீதத்திற்குப் பதிலாக 65 பில்லியன் டாலராக (ஜிடிபியில் 1.6%) இருக்கக்கூடும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பற்றாக்குறையில் இருந்த கட்டணச் சமநிலை, 2026-27 நிதியாண்டில் உபரி நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் டாலருக்கு ரூ. 96.96 என்ற உச்ச அளவை எட்டியிருந்த ரூபாய் மதிப்பு, தற்போது ரூ.94.6 என்ற நிலைக்கு வந்துள்ளது. மேற்கூறிய காரணிகளால் இது குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்புக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.