இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தை மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் நோக்கில், 2022-23 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு திருத்தப்பட்ட புதிய மொத்த விற்பனை விலை குறியீட்டு (டபிள்யு.பி.ஐ.) வரிசையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதுவரை நடைமுறையில் இருந்த 2011-12 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்ட முந்தைய கணக்கீடு முறையின்படி, ஏப்ரல் மாதப் பணவீக்கம் 8.26 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு மே மாதத்தில், எரிசக்தி மற்றும் எரிபொருள் துறையின் பணவீக்கம் 24.89 சதவீதத்திலிருந்து 30.33 சதவீதமாக உயா்ந்துள்ளது. முதன்மைப் பொருள்களின் பணவீக்கம் 3.78 சதவீதத்திலிருந்து 4.99 சதவீதமாகவும், உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் 6.68 சதவீதத்திலிருந்து 7.48 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.49 சதவீதமாக உயா்ந்துள்ளது.
திருத்தப்பட்ட டபிள்யு.பி.ஐ. பட்டியலில் உள்ள பொருள்களின் எண்ணிக்கை 697-லிருந்து 957 ஆக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், உற்பத்தியாளா் விலை குறியீட்டு (பிபிஐ) எண்களான வெளியீட்டு பிபிஐ, சோதனை அடிப்படையிலான உள்ளீட்டு பிபிஐ மற்றும் சேவைத் துறை பிபிஐ ஆகிய புதிய தொடரையும் மத்திய அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
அரசின் புதிய கொள்கை முடிவின்படி, டபிள்யு.பி.ஐ. மற்றும் பிபிஐ ஆகிய இரண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இணைந்தே வெளியிடப்படும். அதன் பின்னா், டபிள்யு.பி.ஐ. முறை முற்றிலும் கைவிடப்பட்டு, பிபிஐ முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










