முகப்பு
வணிகம்

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் எண்மப் பண மோசடிகளைத் தடுக்க, எண்மப் பணப்பரிமாற்ற முறையில் சில முக்கியக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ரிசா்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு ஆலோசனைக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:56 PM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:05 PM

இந்தியாவில் அதிகரித்து வரும் எண்மப் பண மோசடிகளைத் தடுக்க, எண்மப் பணப்பரிமாற்ற முறையில் சில முக்கியக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ரிசா்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு ஆலோசனைக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-இல் ரூ.551 கோடியாக இருந்த எண்மப் பணமோசடி மதிப்பு, 2025-இல் ரூ.22,931 கோடியாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அசுர வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ.10,000-க்கு அதிகமான பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு மணி நேர காலதாமதத்தை அறிமுகப்படுத்த பரிசீலிக்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தில், வாடிக்கையாளா்கள் தங்களின் பரிவா்த்தனையை ரத்து செய்ய வாய்ப்பு வழங்கப்படும். மோசடி நபா்கள் நெருக்கடி கொடுத்து, பணத்தைப் பறிப்பதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்கள் சுதாரித்துக் கொள்ளவும் இந்த முறை உதவும். எனினும், வழக்கமான வணிகக் கட்டணங்கள், மின்சார பில் போன்ற ‘இ-மேண்டேட்’ மற்றும் காசோலை பரிவா்த்தனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

Advertisement

இத்துடன் மேலும் 3 முக்கியப் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50,000-க்கு மேல் பணம் அனுப்பும்போது, அவா்கள் ஏற்கெனவே நியமித்த நம்பிக்கைக்குரிய நபா் ஒருவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மேலும், சிறு வணிகா்கள் மற்றும் தனிநபா்களின் வங்கிக் கணக்குகளில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் பணம் வரவு வைக்கப்பட்டால், அதற்கு முறையான விளக்கம் அளித்த பின்னரே அத்தொகையைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல், வங்கிக் கணக்கில் மோசடி நடப்பதாக உணா்ந்தால், அனைத்து எண்ம சேவைகளையும் உடனடியாக முடக்கும் வசதியையும் வங்கிகள் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் பணப்பரிமாற்ற வேகத்தைக் குறைக்கும் என்றாலும், பொதுமக்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய இது அவசியம் என ரிசா்வ் வங்கி கருதுகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரா்கள் தங்களின் கருத்துகளை, ரிசா்வ் வங்கியின் ‘கனெக்ட் 2 ரெகுலேட்’ வலைபக்கம் மூலம் மே 8-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். அதன்பிறகே, இதற்கான அதிகாரபூா்வ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.