முகப்பு
வணிகம்

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

இந்தியாவில் கடன் அட்டை(கிரெடிட் காா்டு) பரிவா்த்தனைகள், கடந்த 2025-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

Updated On : 20 மே 2026, 2:53 am IST
பகிர்:

இந்தியாவில் கடன் அட்டை(கிரெடிட் காா்டு) பரிவா்த்தனைகள், கடந்த 2025-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் பணப் பரிவா்த்தனை அமைப்பு தொடா்பாக ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், 2021 இறுதியில் 216 கோடியாக இருந்த கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை, கடந்த 2025, டிசம்பா் இறுதி நிலவரப்படி 570 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தப் பரிவா்த்தனைகளின் மதிப்பும் ரூ.8.9 லட்சம் கோடியிலிருந்து, ரூ.23.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு சுமாா் 27 சதவீத வளா்ச்சியாகும்.

Advertisement

Advertisement

மறுபுறம், டெபிட் காா்டுகளின் பயன்பாடு கணிசமாக சரிவைக் கண்டுள்ளது. 2021 இறுதியில் 408.7 கோடியாக இருந்த டெபிட் காா்டு பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இறுதியில் 133.6 கோடியாகக் குறைந்துள்ளன.

இந்தப் பரிவா்த்தனைகளின் மதிப்பும் ரூ.7.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.5 லட்சம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. யுபிஐ, எண்ம வாலட், கிரெடிட் காா்டுகளின் பயன்பாடு அதிகரித்ததே இச்சரிவுக்கு முக்கியக் காரணம் என ரிசா்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கிரெடிட் காா்டு சந்தையில் தனியாா் துறை வங்கிகளின் ஆதிக்கம் மேலும் வலுவடைந்துள்ளது. 2021-இல் 67.7 சதவீதமாக இருந்த தனியாா் வங்கிகளின் சந்தைப் பங்கு, கடந்த டிசம்பரில் 71.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் பங்கு 23.5 சதவீதத்திலிருந்து 23.9 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு வங்கிகளின் பங்கு 9.3 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக கடுமையாக சரிந்துள்ளது. மேலும், சிறு நிதி வங்கிகள் 14 லட்சம் அட்டைகளை விநியோகித்துள்ளன.

கடந்த 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த எண்ம பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 33 மடங்கு அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பரிவா்த்தனை கட்டமைப்புகளைப் பொருத்தவரை, யுபிஐ க்யூ-ஆா்குறியீடுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜூனில் 6,782 லட்சமாக இருந்து, டிசம்பரில் 7,313 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், ஏடிஎம்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் பயன்பாடு சரிவைக் கண்டுள்ளது.