முகப்பு
வணிகம்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

சென்செக்ஸ் 702.68 புள்ளிகள் சரிந்து 76,847.57 புள்ளிகளாகவும், நிஃப்டி 207.95 புள்ளிகள் சரிந்து 23,842.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 5:45 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 5:26 PM

அமெரிக்க-ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிவடைந்தன.

பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 21 மணி நேரப் பேச்சுவார்த்தையில், அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டத் தவறியதால், இரண்டு வாரங்களாக நீடித்து வந்த தற்காலிகப் போர்நிறுத்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பேச்சுவார்த்தைகள் முறிவுக்கு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பொறுப்பாக்க முயன்று வருகின்றனர்.

இதற்கிடையில், முந்தைய வர்த்தக அமர்வில் வலுவான மீட்சியைக் கண்ட இந்தியப் பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி குறியீடு 23,600-க்குக் கீழே சரிந்தன. இருப்பினும், வர்த்தகத்தில் மத்தியில் ஏற்பட்ட லேசான மீட்சியின் காரணமாக, பங்குச் சந்தை முடிவில் 23,800 புள்ளிகளுக்கு என்ற நிலைக்கு சென்று நிறைவுபெற்றது.

Advertisement

இன்றைய வர்த்த முடிவில், சென்செக்ஸ் 702.68 புள்ளிகள் சரிந்து 76,847.57 புள்ளிகளாகவும், நிஃப்டி 207.95 புள்ளிகள் சரிந்து 23,842.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

துறைவாரியாக மின்சாரம், பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட துறைகள் தலா 1 சதவீதம் சரிந்தன.

சென்செக்ஸில் டைட்டன், சன் பார்மா, என்டிபிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பவர் கிரிட் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை சரிந்தன.

நிஃப்டி-யில் எச்.டி.எஃப்.சி. லைஃப், அதானி எண்டர்பிரைசஸ், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் மாருதி சுசுகி, ஐஷர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் சரிந்தன.

நிஃப்டியில் மிட்கேப் மற்றும் ஸ்மால்-கேப் குறியீடுகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன.

ஏதர் எனர்ஜி, வெல்ஸ்பன் கார்ப், சைடஸ் வெல்னஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, அதானி பவர், சோனா பிஎல்டபிள்யூ, அதானி எனர்ஜி, செயில், ஹிட்டாச்சி எனர்ஜி மற்றும் ஹொனாசா கன்ஸ்யூமர் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில், 52 வார உச்சத்தை எட்டியது.

பூர்வன்கரா லிமிடெட் நிறுவனம் தனது 4வது காலாண்டு விற்பனை 190 சதவீதம் என்ற மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்ததையடுத்து, அதன் பங்குகள் சுமார் 11 சதவீதம் உயர்ந்தன. மறுபுறம், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்ததால், இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 2% சரிந்தன. இதற்கிடையில், இணை நிறுவனரான லக்ஷ்மி நந்தன் ரெட்டி ஓபுல், நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஸ்விக்கி லிமிடெட் பங்குகள் 3% சரிந்தன.

ரூ.110 கோடி மதிப்பிலான வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் டெவ் ஆக்சிலரேட்டர் நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன. அதே சமயம், ஏற்றுமதி விதிமுறைகளை மீறியதாக ஜோதி சிஎன்சி-யின் துணை நிறுவனத்தின் மீது பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், அந்நிறுவனத்தின் பங்குகள் 14 சதவீதம் சரிந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 672.09 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 14ஆம் தேதியன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Indian equity market came under pressure on April 13, after the recent talks between the US and Iran failed without a deal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.