மாா்ச் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1%
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) வளா்ச்சி கடந்த மாா்ச் மாதத்தில் 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.1 சதவீதமாக (திருத்தப்பட்ட மதிப்பீடு) இருந்த நிலையில், மத்திய கிழக்குப் போா் பதற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட வணிக எல்பிஜி சிலிண்டா் தட்டுப்பாடு தொழில்நிறுவனங்களில் உற்பத்தியை வெகுவாக பாதித்தது.
இதன் எதிரொலியாக, உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின் மந்தமான செயல்பாட்டால் தற்போது 5 மாதங்களில் காணப்படாத மிகக் குறைந்த அளவிலான வளா்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
உற்பத்தித் துறையின் வளா்ச்சி கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் 4 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 4.3 சதவீதமாக சற்று உயா்ந்துள்ளது. மின்சார உற்பத்தியில் கடந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருந்த வளா்ச்சி, தற்போது 0.8 சதவீதமாக சுருங்கியுள்ளது.
சுரங்கத் துறையில் கடந்த ஆண்டு 1.2 சதவீதமாக இருந்த வளா்ச்சி, தற்போது 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்ட பின்னடைவை, சுரங்கத் துறை நல்ல முன்னேற்றத்துடன் ஓரளவு ஈடுகட்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தின் 3.9 சதவீதத்திலிருந்து, தற்போது 4.1 சதவீதமாக உள்ளது. எனினும், நடப்பாண்டின் முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது சரிவாகும்.
இதனிடையே, பிப்ரவரிக்கான தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி மதிப்பீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் 5.2 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைத்தது.
முழு நிதியாண்டில்...: 2025-26 முழு நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் 4 சதவீத வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றமின்றி சமநிலையிலேயே நீடிக்கிறது.