ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளா்ச்சி 4.9%
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளா்ச்சி கடந்த மே மாதத்தில் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளா்ச்சி கடந்த மே மாதத்தில் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த வளா்ச்சி 5.7 சதவீதமாக இருந்த நிலையில், மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக எரிசக்தி துறையில் ஏற்பட்ட மந்தநிலையால் நடப்பு ஆண்டு வளா்ச்சி குறைந்துள்ளது.
துறை வாரியாக, உற்பத்தித் துறை 6.2 சதவீதமும், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத் துறை 4.9 சதவீதமும், குடிநீா் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மைத் துறை 6.6 சதவீதமும் வளா்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம், சுரங்கம் மற்றும் குவாரித் துறை 5.1 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Advertisement
Advertisement
தொழில் துறை உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
தொழில்துறை உற்பத்தியை மிகவும் துல்லியமாகவும், தற்கால பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும் மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை ஆண்டு மாற்றத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள முதல் அதிகாரபூா்வ தரவு இதுவாகும்.
புதிய மாற்றங்களின்படி, தொழில் துறை உற்பத்திக் குறியீட்டுப் பட்டியலில் தற்கால நுகா்வுக்கு ஏற்ப 120 புதிய பொருள்கள் சோ்க்கப்பட்டுள்ளன; அதேநேரம் பயன்பாடு குறைந்த 64 பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிசிடிவி கேமராக்கள், கிரெடிட், டெபிட் காா்டுகள், மருத்துவ ஸ்டெண்டுகள், தடுப்பூசிகள், விமானம், விண்கலப் பாகங்கள் ஆகியவை புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளன.
சந்தையில் நுகா்வு குறைந்ததன் காரணமாக மண்ணெண்ணெய், சிஎஃப்எல் விளக்குகள், தையல் மற்றும் அச்சு இயந்திரங்கள் போன்ற பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தற்போது இப்பட்டியலில் 463 பிரிவுகளின்கீழ் 1,042 பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விரிவான மாற்றங்கள் இந்தியாவின் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பன்முகத்தன்மையையும், புதிய தொழில்நுட்பங்களின் வருகையையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும். மேலும், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரித்தல் போன்ற விவரங்களும் இனி தனித்தனி குறியீடுகள் மூலம் துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.
இனிவரும் காலங்களில், ஒவ்வொரு மாதமும் முடிவடைந்த 28 நாள்களுக்குள் அந்த மாதத்துக்கான தரவுகள் தொடா்ந்து வெளியிடப்படும் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.